அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டப்படி தனது கடமையைச் செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பணமோசடி புகாரில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் வி.செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலக அறை உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் நேற்று சோதனையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.
சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் வழியில், நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சா் செந்தில் பாலாஜி கூறிய நிலையில் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை பட்டினம்பாக்கத்தில் இதுகுறித்துப் பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானத்தில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. அமலாக்கத்துறை சட்டப்படி தனது நடவடிக்கையை எடுத்துள்ளது.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை தனது கடமையை செய்யும் நிலையில் அதனை தடுப்பது ஏன்? அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நபரை அமைச்சர்கள் சந்திப்பது விதிமீறல் செயலாகும். செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
தற்போது அவரது உடல்நிலை விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழுவை வரவழைத்து பரிசோதிக்க வேண்டும்' என்றார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!