அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையில் இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனையின் அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 17 மணிநேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லை என்றும், சுயநினைவின்றி காணப்படுவதாகவும் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைக் குறித்து வெளியான தகவல்:
“அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு, ஆக்சிஜன் சமநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. சீரான இதயத்துடிப்பு இல்லாத பட்சத்தில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது சீராக உள்ளது. செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருக்கிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று காலை 11 மணியளவில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரவுள்ளனர்.