செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.
செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நீதிமன்றக் காவலை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி வாதம் செய்தார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அதை நிராகரிக்கக் கோர முடியாது. ஜாமீன் தான் கேட்க வேண்டும். செந்தில் பாலாஜி கைதில் அனைத்து சட்டவிதிகள் பின்பற்றப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்காக செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞர் இளங்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை வழங்குகிறது.
காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதும் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அதிகாலை அவரை கைது செய்தனர்.
அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லாத காரணத்தால் ஆஞ்சியோகிராம்(இருதய ரத்த நாள பரிசோதனை) செய்யப்பட்டதில், மூன்று முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மற்றும் இஎஸ்ஐ மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு வருகிற ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.