அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கரூர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 17 மணிநேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லை என்றும், சுயநினைவின்றி காணப்படுவதாகவும் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கரூரில் அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா, திருக்காம்புலியூர் ரவுண்டானா மற்றும் பாஜக அலுவலகம் உள்ள பைபாஸ் சாலை பகுதி உள்பட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.