பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பழமையான தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லாமல்போய்விடும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் ரூ.12 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருமண அரங்குகள், அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நானும் சகோதரி செல்வியும் இந்த நிலத்தை வாங்கினோம். கடும் சிரமங்களுக்கு பின் இந்த கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு உதவிய அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நன்றி.
என் தாய் எழுப்பிய அன்புக்கோட்டை இது. எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டாலும், கடைசியாக தேர் நிலைகொள்வதை போல திருவாரூர் வந்தார் கலைஞர் கருணாநிதி.
கருணாநிதி இன்னுமும் ஆள்கிறார் என்பதை கலைஞர் கோட்டம் நினைவுபடுத்தும் என உருக்கமாக பேசினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாய கட்சிகள் ஒருமுகமாக செயல்பட்டு வெற்றி பெறுகிறோம். அந்த செயல்பாட்டு ஒருங்கிணைப்பு அகில இந்திய அளவில் ஏற்பட வேண்டும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் பழமையான தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லாமல்போய்விடும். தமிழகத்தில் செயல்படுவது போல, இந்திய அளவிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.