நாளை அதிகாலை செந்தில் பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் 2011-2016-இல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, வேலைவாய்ப்புப் பெற்றுத் தர பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வி.செந்தில் பாலாஜி மீது புகாா் எழுந்தது. இந்த நிலையில், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக திமுக அரசில் இருந்த வந்த செந்தில்பாலாஜி, சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறையால் ஜூன் 13-ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டாா்.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையின்போது நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருந்தது தெரியவந்தது.
இதையும் படிக்க: அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நாளை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.