வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் காத்திருந்த பெண் பயணிகளை ஏற்றாமல், அரசு நகரப் பேருந்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்க கட்டணமில்லை என அறிவித்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.
கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிப்பதால், நகரப் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஏளனமாகப் பேசுவதாகவும், பேருந்து நிறுத்தங்களில் பெண்களைக் கண்டால் நிறுத்தாமல் சென்று விடுவதாகவும், பரவலாக பெண்களிடையே குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்த புகார் உண்மையெனத் தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் பேருந்துக்கு காத்திருக்கும் பெண்களை, அரசு நகரப் பேருந்துகளில் ஏற்றிச் செல்வதில்லை என புகார்கள் எழுந்தன.
மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் திங்கள்கிழமை கிழமை அரசு நகரப் பேருந்துக்காக காத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள், பேருந்தை நிறுத்தி ஏற்றிச்செல்ல கைகளை தாழ்த்தி செய்கை செய்து காண்பித்தும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனை வீடியோ பதிவு செய்த சிலர், சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இரு தினங்களாக முகநூல், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
கட்டணமின்றி இலவசமாகப் பயணிப்பதால், அரசு நகரப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு நடந்துகொள்வதாக பெண்களும், நெட்டிசன்களும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருவதால்,
சம்மந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துகள் அதிகாரிகள், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க | பிரதமர் மோடியிடம் ஒரே கேள்வி! வைரலாகும் செய்தியாளர் சந்திப்பு!!