ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கினை மார்ச் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், பங்கஜ் மித்தல் கொண்ட அமா்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது பேரணி விவகாரத்தில் தமிழக அரசு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக ஆர்எஸ்எஸ் தரப்பு தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களில் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.
அப்போது, தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களா? நான் கேள்விப்பட்டதே இல்லையே என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், 'பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம். எனினும் முழுமையாக அனைத்து இடங்களிலும் பேரணிக்குத் தடை விதிக்கவில்லை, பிரச்னை உள்ள இடங்களில் மட்டும் தடை விதித்துள்ளோம்' என்றார். பிரச்னை உள்ள இடங்கள் குறித்து உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்த போதும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் நாளை மறுநாள்(மார்ச் 5 ) நடக்கவிருந்த பேரணியை ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்: டிடிவி தினகரன்