நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அமைச்சர் உதயநிதி பேசுகையில், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 2010 ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் என்பதற்காக இத்திட்டமானது நிறுத்தப்பட்டு யாருக்கும் உபயோகம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த திட்டத்திற்கு வட்டி மட்டுமே ரூ.1, 250 கோடி விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.1,250 கோடி ஆனால் இந்த திட்டத்திற்கு செலுத்தியுள்ள வட்டி ரூ.1,250 கோடி, இதனால் ரூ.2,500 கோடி யாருக்கும் உபயோகம் இல்லமால் செலவாகியுள்ளது.
இதையும் படிக்க | இந்து அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
திமுக தலைமையிலான அரசு அமைந்தவுடன் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விரைவில் மோகனூரில் உள்ள சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று உறுதியளித்துள்ளார்.
அந்த வகையில் முதல்வர் தலைமையிலான அரசானது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிவுற்றவுடன் இணை மின் திட்டத்தினை நேரில் வந்து நானே தொடங்கி வைப்பேன் என்ற செய்தியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.