தமிழகத்தில் அதிகம் பரவிவரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்!

தமிழகத்தில் அண்மைக்காலமாக பரவி வரும் இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸ் (எச்3என்2) தற்போது அதிகளவில் பரவி வருவது அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தமிழகத்தில் அண்மைக்காலமாக பரவி வரும் இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸ் (எச்3என்2) தற்போது அதிகளவில் பரவி வருவது அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது. 

காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை(எச்3என்2) திரிபு வைரஸ் தொற்று பிற துணை வகைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரத் துறையின் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பேராசிரியர் மருத்துவர் எஸ்.சந்திரசேகர் கூறுகையில், 

குளிர்காலம் மற்றும் பருவமழைக் காலம் நிறைவடைந்தபோதிலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த காய்ச்சல் பெரியவர்களை விடக் குழந்தைகளுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், தொண்டைப் புண், உடல் வலி, சோர்வு, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் நீடிக்கின்றது. 

நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் பாதிப்போடு மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். அதில் பெரும்பாலானவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சில நாள்களிலேயே குணமடைந்துவிடுகின்றனர். 

கடந்த பிப்ரவரி மாதத்தில் மாநில பொது சுகாதார ஆய்வகம் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் அறிகுறிகளுடன் உள்ள சுமார் 50 பேரின் மாதிரிகளைப் பரிசோதித்து அதன் சுழற்சியைக் கண்டறிந்தது. அதில் பெரும்பாலும் சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் சுவாச நோய்க்கிருமிகளே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

பரிசோதனை முடிவில் தற்போது கரோனா பாதிப்போ அல்லது பன்றிக் காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதேவேளையில் இன்ஃப்ளூயன்ஸா - ஏ வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வைரஸ் தொற்று சில நாள்களில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதியவர்கள் பெரும்பாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள், பொதுஇடங்களில் புழங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படியே வெளியே செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். 

இது பருவகால காய்ச்சலுக்கு காரணமாக பொதுவான சுவாச நோய்க்கிருமியாகும். காய்ச்சல் உள்ளவர்கள் அருகிலுள்ள அரசு ஆரம்பச் சுகாதார மையங்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுகாதார மையத்தில் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளலாம். 

மார்ச் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 200 முகாம்கள் நடத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் எம்.ஏ.சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் அதிக காய்ச்சல் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை மக்களுக்கு மொபைல் போன் மூலம் அனுப்பப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com