உலகப் பாரம்பரியச் சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரிய கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி நெகிழி இல்லா பகுதி என அறிவித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் பெரிய கோயில் வளாகம் முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும்போது துணிப் பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவ- மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு ரூ.25,000 ரூபாயும், துணிக்கடை போன்ற கடைகளுக்கு ரூ.10,000 ரூபாயும் சிறிய கடைகளுக்கு ரூ.1,000 ரூபாயும் அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும். மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் . பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வட்டாட்சியர் மாநகர் நல அலுவலர், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.