
வாழப்பாடியில் நகை வியாபாரி பைக்கில் இருந்த ரூ.5.17 லட்சம் கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நகை வியாபாரியின் இருசக்கர வாகனத்திலிருந்து, ரூ.5.17 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற, மர்மநபர்கள் குறித்து வாழப்பாடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி அடுத்த குறிச்சி ஊராட்சி கண்ணுக்காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (42). அரிசி, மளிகை வியாபாரம் செய்து வரும் இவர், பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. புதன்கிழமை மாலை 4 மணி அளவில் தனியார் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து இருசக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு, வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.
தனது இரு சக்கர வாகனத்தை உணவகம் முன்பாக நிறுத்தி இவர், சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்திலுள்ள பெட்டியை உடைத்து, அதிலிருந்த ரூ.5.17 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதனால் பதறிப்போன வியாபாரி பிரபு, இதுகுறித்து வாழப்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து, ரூ.5.17 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: அமைதியாக நடக்கும் பேரணியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்: கார்கே
வாழப்பாடியில் பட்டப்பகலில் நகை வியாபாரியின் ரூ.5.17 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போன சம்பவம், இப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.