வருமானவரித் துறை சோதனையில் ரூ.3.5 கோடி பணம் சிக்கியதாக வெளியான தகவலுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எந்தவொரு அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த குடும்பங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, தவறாக வழிநடத்துபவை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது போன்ற குற்றச்சாட்டு எங்கள் நிறுவனத்தின் மீதான நன்மதிப்பை கெடுக்கும் நோக்கத்தில் உள்ளது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி விதிகளுக்கும், இந்தியாவின் பொருளாதார சட்டங்களுக்கும் உட்பட்டே செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம்.
வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆவணங்கள், எங்கள் நிறுவனம் இதுவரை விற்ற நிலங்கள், தற்போது விற்பதற்காக வைத்திருக்கும் நிலங்கள், அதற்கான நிதி ஆதாரம் போன்ற அனைத்தையும் தயங்காமல் சமர்ப்பித்திருக்கிறோம் என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.