வருவாய்த் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்களை மாணவ - மாணவிகளுக்கு உடனடியாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதையடுத்து மாணவ, மாணவிகள் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பம் செய்யவிருப்பதையொட்டி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ்களை கால தாமதமின்றி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வருவாய் வட்டாட்சியர், கோட்டாட்சியர்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ, மாணவியர்கள் தங்களுடைய உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக ,வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை முன்னுரிமை கொடுத்து உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் அறிவுறுத்தியுள்ளார்.
இச்சான்றிதழ் அனைத்தும் இணையவழியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவ, மாணவியர்கள் இணையவழியாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வருவாய்த் துறையின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மேலும், சான்றிதழ்களை எவ்வித காலதாமதமின்றி வருவாய் வட்டாட்சியர்கள் /வருவாய் கோட்டாட்சியர்கள் உடனடியாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளேன்.