
கோவை: கோவை அருகே மத்திய அரசு நிறுவன வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் வட மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம், செயல்பட்டு வருகிறது. இங்கு ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்று விக்கப்படுகிறது.
இங்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் இது யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகும்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல்(23) என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு நிறுவன வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருக்கையில் அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது.
இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடி வந்து விஷாலை மீட்டு கேரள மாநில எல்லைக்குள்பட்ட கோட்டைதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். விஷாலுக்கு மார்பு எலும்பு முறிவு, வலது கால் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தடாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.