இருசக்கர வாகனத்தையே நடமாடும் மளிகைக் கடையாக மாற்றிய நெறிக்குறவரின் திறமையைப் பாராட்டி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கைகொடுத்து வாழ்த்துச் சொன்ன விடியோ வைரலாகி வருகிறது.
நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சில மாற்றங்களை செய்து, அதில் உணவுபொருள்களை அழகாக அடுக்கி, சாலையோரம் விற்பனை செய்து வருகிறார்.
இன்று காலை அண்ணாசாலையில் அவர் வழக்கம் போல விற்பனை செய்து கொண்டிருந்த போது, அவ்வழியாகச் சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்த நடமாடும் மளிகைக் கடையைப் பார்த்ததும் அசந்துவிட்டார். பிறகு உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி, மணிகண்டனை அழைத்துப் பேசினார்.
இதனை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் மலைத்துப்போனார். அமைச்சரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினார். அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்ட பிறகு, புதிய யோசனைக்கு மணிகண்டனுக்கு கைகொடுத்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவம் முழுவதும் விடியோவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை மா. சுப்பிரமணியன் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
அந்த விடியோவில், சற்றுமுன் மக்கள் நல்வாழ்வுத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்காக விமான நிலையத்துக்கு விரைந்துகொண்டிருந்தபோது அண்ணா சாலையில் மணிகண்டன் எனும் நெறிக்குறவர் சமூகத்தை சார்ந்த தோழர் இரு சக்கர வாகனத்தில் ஒரு "நடமாடும் மளிகை கடையை" சுமந்தபடி சென்றுகொண்டிருந்தார்.
அவரின் தன்னம்பிக்கை முயற்சியை பாராட்டவேண்டும்போல் தோன்றியது... என்று பதிவிட்டு, அந்த விடியோவையும் இணைத்திருந்தார்.