சிதம்பரம்: சிதம்பரத்தில் 11-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் 16 வயது மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் கே.ஆர்.எம் நகரில் வசித்து வருபவர் ஜானகி மகன் ஜீவா (16). தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் இம்மாணவர் வெள்ளிக்கிழமை வெளியிலான தேர்வு முடிவுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலில் இருந்த ஜீவா சிதம்பரம் அருகே விபீஷணபுரம் செல்லும் ரயில்வே கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜீவா எழுதி வைத்துள்ள கடிதத்தில் 'என்னோட அம்மா, பாட்டி, என்னை ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது குறைந்த மதிப்பெண் எடுத்தேன். ஆனால் பதினோராம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் பெறலாம் என்று நினைத்தேன். ஆனால் என்னால் இந்த முறையும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். இதனால் கல்வியில் தகுதி இல்லாதவன், அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன், என் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை மேலும் பாட்டியை நல்லா பார்த்துக்க வேண்டும், தம்பியை நல்லா பார்த்துக்க வேண்டும், அம்மா நீ உன் உடம்பை பார்த்துக்கோ என் உயிரிழப்புக்கு யாரும் காரணம் இல்லை, என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.