அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா? ராமதாஸ் கேள்வி

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா? ஓட்டுனர்களை  அரசே நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா? ராமதாஸ் கேள்வி


சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா? ஓட்டுனர்களை  அரசே நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 234 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் அமர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு எழுந்த எதிர்ப்புகள் அடங்குவதற்குள்ளாக,  விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 75 ஓட்டுனர்களை தனியார் நிறுவனம் மூலம் குத்தகை முறையில் அமர்த்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் பணி  அமர்த்துவதற்கு பதிலாக கொத்தடிமைகளைப் போல அரசு பணியமர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பிற கோட்டங்களுக்கும் இதே முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை அமர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு குத்தகை முறையில் பணியாளர்களை அமர்த்துவதற்காக  அரசுத் தரப்பில் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிரந்தர பணியாளர்களை தேர்வு செய்ய அதிக காலம் ஆகும் என்பதால் தான் இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் கூறுகின்றன. இது வலுவற்ற வாதம். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த இரு ஆண்டுகளாகவே ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையால் முடங்கிக் கிடக்கின்றன. 

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பற்றாக்குறை காரணமாக 2022-23ஆம் ஆண்டில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 29.70 லட்சம் நடை பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக  ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருக்கிறேன். தமிழக அரசு நினைத்திருந்தால், கடந்த ஆண்டே ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேர்வை தொடங்கியிருக்கலாம். ஆனால், அப்போது அதை செய்யாமல், போதிய காலக்கெடு  இல்லாததால் தான் குத்தகை முறையில் பணியாளர்கள் அமர்த்தப்படுவதாக கூறுவது ஏமாற்று வேலை.

தனியார் நிறுவனங்கள் தான் பணியாளர் நியமனங்களில் புதிய, புதிய விதிகளை புகுத்தி, அவர்களின் உழைப்பு சுரண்டும் என்று குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்தகைய உழைப்புச் சுரண்டலை ஒழிப்பது தான் அரசின் பணி. ஆனால், அரசே அத்தகைய உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்ட நிலையில், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதற்காக பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளைத் தான் மக்கள் நம்பியிருக்கின்றனர். அந்த வேலைவாய்ப்புகளிலும் உழைப்புச் சுரண்டலை அனுமதிக்கக் கூடாது. எனவே, மாநகரப் போக்குவரத்துக்கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம்  உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகை முறை நியமனங்களை  கைவிட்டு, அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com