மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பொன்முடி பேசியது:
“சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல பேசும் ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
நாள்தோறும் பொய் பேசுவதையே தனது தொழிலாக ஆளுநர் கொண்டுள்ளார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாக ஆளுநர் செயல்படுவது தெளிவாக தெரிகிறது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு தனது கருத்துகளை ஆளுநர் பேசட்டும்.
மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் சட்டங்களுக்கு கையெழுத்திட நியமிக்கப்பட்ட ஆளுநர் மறுக்கிறார்.
தமிழக வரலாற்றில் இதுபோன்று மோசமான ஆளுநர் இருந்தது இல்லை.
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புக்கு ஆளுநர் கையெழுத்திட மறுத்ததால், பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.