சென்னை: "நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரலாம், முன்னதாக கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்" என்று திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற லியோ திரைப்பட வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய், மக்கள்தான் மன்னர்கள். நான் அவர்கள் கீழ் இருக்கும் தளபதி. அவர்கள்(மக்கள்) ஆணையிட்டால் செய்து முடிக்கிறேன் என தனது அரசியல் பயணத்தை சூசகமாக வெளிப்படுத்திருந்தார்.
இதையடுத்து பலரும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பல கருத்துகளை தெரிவித்தனர்.
இதையும் படிக்க | எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை
இந்த நிலையில், சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த தூய்மைப் பணியை தொடங்கி வைத்த பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகிறார். அவர் அரசியலுக்கு வரட்டும். ஆனால், முன்னதாக அதற்கான கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது.
அரசியல் என்பது அனைவருக்கும் சவாலானது. அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள் என வெற்றிமாறன் தெரிவித்தார்.