தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு மீது எழுந்த வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணை செய்து வந்தனர். இதில் அவர் மீதான புகார்களுக்கு உறுதியான ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள், சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், கரூர் ஆகிய ஊர்களில் உள்ள இடங்கள் மற்றும் அவருடன் தொடா்புடையவா்களின் வீடுகளில் வருமானவரித் துறையினா் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | நீர்யானைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? கொலம்பியாவின் துயரம்!
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர் வீடு, அண்ணாநகர், வேப்பேரி, தியாகராயநகர், திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலு வீடு, எடப்பாளையத்தில் உள்ள அருணை கல்லூரி, அலுவலகம், அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், கரூரில் 4 இடங்கள் என மொத்தமாக 80 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | விழுப்புரத்தில் 3வது நாளாக வருமான வரித் துறை சோதனை
திருவண்ணாமலையில் 5 கல்லூரிகள் உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை தொடர்வதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உட்பட நான்கு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் வசித்து வரும் தொழிலதிபா் பிரேம்நாத் வீடு, கிரானைட் கற்கள் விற்பனை நிலையம், தங்கும் விடுதி என தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.