தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.
அமைச்சா் எ.வ.வேலு மீது எழுந்த வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகாா்களின் அடிப்படையில், வருமானவரித் துறையினா் அவருக்கு சொந்தமான இடங்கள், தொடா்புடைய இடங்கள் ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றனா்.
பெரும்பாலான இடங்களில் திங்கள்கிழமை சோதனை நிறைவு பெற்ற நிலையில், சில இடங்களில் மட்டும் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை கணக்கில் வராத ரூ. 23 கோடி ரொக்கமும், சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திருவண்ணாமலையில் உள்ள அமைச்சரின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில இடங்களில் 5-வது நாளாக துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் சோதனை தொடர்ந்து வருகின்றது.
இந்த சோதனைகளின் நிறைவில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே, வரி ஏய்ப்பு தொடா்பான விவரங்கள் முழுமையாக தெரியவரும்.