இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 15 இந்திய மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் வியாழக்கிழமை காலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
முன்னதாக, இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கடந்த 18-ஆம் தேதி கைது செய்தது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மீனவர்கள் குழு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது மீனவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இதனையடுத்து மீனவர்களின் குடும்பத்தினரிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழர்களின் நலன்களுக்கு எப்போதும் அதிக முன்னுரிமை அளித்து வருவதாக கூறினார்.
முன்னதாக அக்டோபர் 29-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
அதில், “தமிழக மீனவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். அடிக்கடி அவர்கள் கைது செய்யப்படுவதால் மீனவர் சமூகம் பெரியளவில் பாதிக்கப்படுகிறது. இலங்கை அரசின் இத்தகைய கைது நடவடிக்கைகள் மீனவர்கள் மத்தியில் அதிக மன அழுத்தத்தை உருவாக்கி வருகிறது. எனவே இலங்கை அரசின் இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தி இருந்தார்.