கொளுத்தும் வெயிலுக்கு இடையே, திடீரென வேலூரில் கனமழை வெளுத்துவாங்கியதால் ஊட்டி போல குளுகுளுவென மாறியது.
ஆனால் சாலைகளில் குளம் போல தேங்கிய நீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வேலூர் மாவட்டத்தில் காலை முதல் சுமார் 94 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை வேளையில் திடீரென வேலூர் மாநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.
குறிப்பாக, வேலூர் பழைய பேருந்து நிலையம், மீன் சந்தை, கொணவட்டம், அண்ணா சாலை, சேன்பாக்கம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
கனமழையால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, கொணவட்டம் சர்வீஸ் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியது. அதனால் அந்த வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் ஊர்ந்து சென்றனர். சில இருசக்கர வாகனங்கள் பழுதடைந்த நிலையில் தண்ணீரில் இறங்கி வாகனத்தை தள்ளிச் சென்றனர்.
லேசான மழை பெய்தால் கூட இந்த பகுதியில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக தேங்குவதாகவும், மழைக்காலம் துவங்குவதற்கு முன் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சர்வீஸ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை வேளையில் பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.