/

பால் நிறுவனத்தில் விபத்து: ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம்!

மணப்பாறை அருகே தனியார் பால் நிறுவனத்தில் நீராவி கொதிகலன்(ஸ்டீம் பாய்லர்) வெடித்த விபத்தில், பாய்லர் பிளான்ட் பகுதி முழுவதும் வெடித்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசமடைந்துள்ளது. 

News image
Updated On :10 அக்டோபர் 2023, 4:28 am

DIN

மணப்பாறை அருகே தனியார் பால் நிறுவனத்தில் நீராவி கொதிகலன்(ஸ்டீம் பாய்லர்) வெடித்த விபத்தில், பாய்லர் பிளான்ட் பகுதி முழுவதும் வெடித்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசமடைந்துள்ளது. 

இரவில் பணியாளர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பல மீட்டர் தூரம் தூக்கி எறியப்பட்ட பாய்லர், முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பாலப்பட்டியில், திருச்சியை சேர்ந்த வரதராஜன் என்பவர் வர்ஷன் என்னும் தனியார் பால் நிறுவனம் நடத்தி வருகிறார். 

Story image

இதில், உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பால் பாக்கெட்களில் நிரப்புதல் மற்றும் மோர், தயிர், நெய் போன்ற பால் பொருள்கள் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று அதிகாலை நிறுவனத்தின் பின் பகுதியிலிருந்த ஸ்டீம் பாய்லர் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில், டன் கணக்கில் எடையுள்ள ஸ்டீம் பாய்லர் பல பாகங்களாக வெடித்து பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளது. ஸ்டீம் பாய்லர் ப்ளாண்ட் முழுவதும் இருந்த மின் சாதனங்கள் மற்றும் ஸ்டீம் இயந்திர பகுதிகள் என சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. 

பால் நிறுவனத்தில், இரவு பணியில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் விடியற்காலை நடந்த இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இவ்விபத்து குறித்து மணப்பாறை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.