விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 3-10-2023 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் கங்கர்செவல், க.லட்சுமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், த/பெ. பிலாவடியான்(வயது 42) மற்றும் ராஜா, த/பெ.வர்கீஸ் (வயது 38) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கணேசன், த/பெ. பிலாவடியான் 7-10-2023 அன்றும், ராஜா, த/பெ. வர்கீஸ் இன்றும் (10-10-2023) உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முத்தம்மாள், க/பெ. மாரிமுத்துக்கு ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.