சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ எனும் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்த நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், ஹாக்கி மைதானம், வாலிபால் மைதானம், டேபிள் டென்னிஸ் அரங்கம், நீச்சல் குளம் உள்பட 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், வீரர்கள் தங்குவதற்கு அறைகள், பணியாளர்கள் குடியிருப்புகள், உணவகங்கள் உள்ளிட்ட வசதியும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செம்மஞ்சேரி, வண்டலூர், குந்தம்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்களில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்டம் செம்மஞ்சேரியில் 105 ஏக்கர் காலி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.
நவம்பர் 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.