திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடிகள் முத்து சரவணன், ஞாயிறு சதீஷ் ஆகியோர் புதூர் மாரம்பேடு பகுதியில் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது, காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வியாழக்கிழமை கொல்லப்பட்டனர்.
செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கடந்த மாதம் நடைபயிற்சி செல்லும்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பார்த்திபனை கொலை செய்த நபர்களை செங்குன்றம் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கியிருந்த ரௌடிகள் முத்து சரவணன் (35), ஞாயிறு சதிஷ் (27) ஆகியோரை தனிப்படை காவலர்கள் பிடித்து விசாரணைக்காக செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அப்போது, மீஞ்சூர்-நெமிலிச்சேரி சாலை மாரம்பேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது ரௌவுடிகள் இருவரும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
அவர்களை காவலர்கள் தற்காப்பு கருதி துப்பாக்கியால் சுட்டதில் ரௌடி முத்து சரவணன் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், மற்றொரு ரௌடியான ஞாயிறு சதிஷ் பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்து சோழவரம் காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரௌடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தில் ஆவடி மாநகர காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி மற்றும் சிதறி கிடக்கும் தோட்டாக்களை காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.