தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. இதையொட்டி, பெரிய கோயில் மின்னொளியில் மின்னி வருகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூடிய திருநாளை, அவன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதன்படி, நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து 5.30 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேலும் இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம், 8.15 மணிக்கு சிவதாண்டவம், 8.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சதய விழா நாளான புதன்கிழமை காலை 7.20 மணிக்கு மாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறைத் திருவீதி உலா, காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகல் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவு விழாவில் முனைவர் அ. தெட்சிணாமூர்த்தி, மருத்துவர் எம். செல்வராஜ், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் வ. பழனியப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாமன்னன் இராசராசன் விருது வழங்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இதையடுத்து, இரவு 8 மணிக்கு சுகிசிவம் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. நிகழாண்டு இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் இரவு நேரத்தில் மின்னொளியில் மின்னுகிறது.