தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு காக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு காக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும்



சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள்கள் நடமாட்டம், பொதுவெளியில் பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல், இதுவே 28 மாதகால திமுக அரசின் சாதனையாக உள்ளது.

தமிழ்நாடு புதைக்குழிக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு பல குற்ற நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக பிரச்னைகள் ஏற்படுவதும், காவல் துறையினற் நடவடிக்கை எடுப்படுதும் இயல்பு. 

ஆனால் சமூக விரோத சக்திகளை ஒடுக்க வேண்டிய காவல் துறையினர், ஆளும் கட்சியினரின் கட்டளைக்கு அடிபணிந்து கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. 

தற்போது நடைபெற்று வரும் எந்தவொரு குற்ற நிகழ்விலும், ஏதாவதொரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. 

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மக்களிடையே அச்சமும், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையயும் முதல்வரின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ளது. இது, தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது. 

திமுக அரசு பொறுப்பேற்ற நாள்முதல் சமூக விரோதிகளின் கொட்டமும், கொலைகளும் அதிகரித்து வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த சில வாரங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.

வணிக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற சட்டவிரோதச் செயல்களால், வணிக நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியது மக்களின் தலைவிதியாக உள்ளது. இந்த திமுக அரசு கடிவாளம் இல்லா குதிரைப்போல் தறிகெட்டு ஓடுகிறது. இந்த ஆட்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட தமிழக மக்கள் இப்போது விழிப்படைந்துள்ளனர். 

இனியாவது, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி, இரும்புக் கரம் கொண்டு போதைப்பொருள்கள் நடமாட்டத்தை ஓடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில், விடியா திமுக ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com