நிகழாண்டு 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு!

நிகழாண்டு 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் கே. மீனா.
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கோட்ட அலுவலகத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கழகத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அசோக்குமார் கே. மீனா.
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கோட்ட அலுவலகத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கழகத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அசோக்குமார் கே. மீனா.
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர்: நிகழாண்டு 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் கே. மீனா.

தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையிலுள்ள இந்திய உணவுக் கழகக் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை சட்ட மாமேதை அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

அரிசி உற்பத்தியில் சுயசார்பு நிலை எட்டப்பட்டுள்ளதால், போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, நிகழாண்டும் அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது. நாட்டின் ஒரு பகுதியில் உற்பத்தி குறைவு ஏற்பட்டாலும், அதற்கு ஈடாக மற்ற பகுதிகளில் உற்பத்தி இருக்கும்.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 570 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் கோதுமை உற்பத்தியும் போதுமான அளவுக்கு இருக்கிறது.

கடந்த ஆண்டு கோதுமை தேவை 262 லட்சம் டன்னாக இருந்த நிலையில், போதுமான அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதே போல கடந்த ஆண்டு பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட திட்டங்களுக்கு 400 லட்சம் டன் அரிசி தேவைப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக 570 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.  அதாவது 170 லட்சம் டன் கூடுதலாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகத்தான் திறந்தவெளி சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குகின்றன. ஆனால் மீதமுள்ள 60 கோடி மக்களுக்கு கரீப் கல்யாண் திட்டத்தில் உணவு தானியங்கள் கிடைக்காததால், அவர்களுக்கு திறந்தவெளி சந்தை மூலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நிகழ் பருவத்தில் 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைவிட கூடுதலாக கொள்முதலாகும் என நம்புகிறோம். 

மத்திய அரசின் சிறுதானிய ஆண்டு இயக்கத்தையொட்டி, கேழ்வரகு, துவரம் பருப்பு, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் சிறு தானியங்களைக் கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுதானியங்கள் கொள்முதல் செய்யும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. இதேபோல ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறுதானிய கொள்முதல் தொடங்கப்படும்.

நெல் கொள்முதலில் ஈரப்பத தளர்வு காரணமாக நுகர்வோர்களுக்கு தரம் குறைவான அரிசி கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் தங்களது நெல்லை நன்கு காய வைத்து 17 சதவீதத்துக்குள் ஈரப்பதத்துடன் கொள்முதல் நிலையத்தில் கொடுத்தால், நுகர்வோர்களும் தரமான அரிசியை உண்பதற்கு வாய்ப்பாக அமையும் என்றார். 

இவ்விழாவில்,  இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் கே. மீனா, இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு பொது மேலாளர் ப. முத்துமாறன், மாவட்ட மேலாளர் கே. ரோகினேஸ்வர குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com