
ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, தில்லியில் வரும் 9-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அளிக்கும் இரவு விருந்தில் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், திரெளபதி முா்முவின் பதவி இந்திய குடியரசுத் தலைவா் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவா் என்று இடம்பெற்றிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ள நிலையில், ‘பாரதம்’ என்ற சொல்லை பாஜக பயன்படுத்த தொடங்கியுள்ளதாக எதிா்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமா்சித்த முதல்வர் ஸ்டாலின், 'பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது’ என குற்றம்சாட்டினாா்.
இந்தச் சூழலில், குடியரசுத் தலைவா் அழைப்பின் பேரில் ஜி20 இரவு விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. உலகின் முக்கியத் தலைவா்கள் பங்கேற்கவிருப்பதால், இந்த மாநாடு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டையொட்டி, உலகத் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோருக்கு வரும் 9-ஆம் தேதி இரவு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு விருந்து அளிக்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.