அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஆா்.எஸ்.பாரதி 2018-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி அன்றைய முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். அதில், ‘தனக்கு வேண்டப்பட்டவா்களுக்கு ரூ. 4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்கியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் பதவியையும், முதல்வா் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளாா். அதனடிப்படையில், எடப்பாடி பழனிசாமியை 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் தண்டிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த மனு மீது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.பாரதி 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தாா்.
இந்த வழக்கில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணை அறிக்கை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. புகாரில் முகாந்திரம் இல்லை என முடிவெடுக்கப்பட்டது என்று வாய்மொழி தகவலாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆா்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இபிஎஸ் மீதான முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.