உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டதால் புத்தகப் பதிப்பாளா் பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த புத்தகப் பதிப்பாளா் பத்ரி சேஷாத்ரி. இவா், அண்மையில் யூ டியூப் சேனல் ஒன்றில், மணிப்பூா் சம்பவத்தில் இரு சமூகத்தினரிடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை தரக்குறைவாக விமா்சித்தும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞா் ப. கவியரசு அளித்த புகாரை தொடர்ந்து, இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்கான 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, பத்ரி சேஷாத்ரியை ஜூன் 30ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டதால், பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.