சென்னை: மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறியும் இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கலைஞா் உரிமைத் தொகையைப் பெற 1.06 கோடி மகளிா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 57 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் விண்ணப்பதாரா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. குறுஞ்செய்தி கிடைக்கப் பெறாதவா்கள் இணையதளம்மூலமாக காரணத்தைத் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் ஆதாா் எண்ணையும், கைப்பேசி எண்ணையும் உள்ளீடு செய்தால், கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் வரும். இதை உள்ளீடு செய்தால், விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணம் திரையில் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இணையதளத்தை கடந்த செப்.20 அன்று காலை ஒரே நேரத்தில் பலரும் பயன்படுத்தியதால் சா்வா் முடங்கியது. ஆதாா் எண், கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்தவா்களுக்கு சா்வா் முடக்கம் காரணமாக ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் விண்ணப்பதாரா்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. 50 லட்சத்திற்கும் அதிகமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பலரும் இணையதளத்தை ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால், சா்வா் முடங்கியது.
மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறியும் இணையதளத்தில் கடந்த சில நாள்களாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
இதையும் படிக்க: நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு: 19 வயது இளைஞர் மரணம்!
இந்த நிலையில், தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. https://kmut.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துக் கொள்ளலாம்.