மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் கவலைப்பட்டதில்லை என திமுக எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுவந்ததால் மணிப்பூர் பிரச்னை முடிந்துவிட்டதுபோல் மத்திய அரசு கூறுகிறது.
மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் கவலைப்பட்டதில்லை. ஆடைகளின்றி 2 பெண்கள் அழைத்துச்செல்லப்பட்டது குறித்து உரிய விளக்கம் அளிக்கவில்லை.
மணிப்பூரில் தற்போதும் வன்முறை நடக்கிறது. அதில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கேள்வி கேட்கும் திமுக உறுப்பினர்கள் மீது குறிவைக்கின்றனர். அரசு என்ன செய்தது என்று பேசாமல், அதற்கு பதிலாக எதிர்கட்சி உறுப்பினர்களை முடக்குகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் பெயர்களையும் மக்களுக்கு புரியாத வகையில் மாற்றியுள்ளனர். இதன் பொருள் பாமரனுக்கு எப்படி புரியும்? எனக் கேள்வி எழுப்பினார்.
மு.க. ஸ்டாலினின் ஒற்றை முயற்சியால் தமிழ்நாட்டில் அத்தனை இடங்களில் வெல்ல முடிந்தது. இந்த நிலையை இந்தியா முழுவதும் ஏற்படுத்த முடியும். மத்திய பாஜக அரசை அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன எனக் குறிப்பிட்டார்.