மேலும் சில அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு

அரசு ஊழியரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அலுவலர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய மற்ற அலுவலர்களிடமும் விசாரணை நடத்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளது.
மதுரையில் அமலாக்கத் துறை அலுவலகம்.
மதுரையில் அமலாக்கத் துறை அலுவலகம்.

அரசு ஊழியரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அலுவலர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய மற்ற அலுவலர்களிடமும் விசாரணை நடத்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். 

இதைத் தொடா்ந்து, அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரை தபால்தந்திநகா் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை உதவி மண்டல அலுவலகத்தில், அங்கித் திவாரியின் அறையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் இன்று(சனிக்கிழமை) காலை வரை சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக மேலும் சில அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வரும் அங்கித் திவாரி என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும். 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார். கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார்.

பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார்.

இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர். 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். 

முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத் துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது தவணையாக இன்று (01.12.2023) காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக் கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார்.

அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின்போது இவருக்கு தொடர்புயை  பல  முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இவர் அமலாக்கத்துறையின் பெயரில் எவரேனும்  மிரட்டியோ அல்லது  அச்சுறுத்தியோ இதேபோன்ற  யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குற்ற நிகழ்வில்  பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும்  சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com