சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46 ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை(ஜன.6) தொடங்குகிறது.
புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை நந்தனம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46 ஆவது புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை(ஜன.6) தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறுகிறது.
புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். கருணாநிதி பொற்கிழி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்குகிறார்.
இந்த பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக ஆயிரம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக திருநங்கையினர் படைப்புகளும் இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெறுகிறது.
புத்தகக் கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
இதையும் படிக்க | மதவாதத்துக்கே எதிரிகள்; மதத்துக்கு இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சர்வதேச புத்தகக் கண்காட்சி
சென்னையில் இந்தாண்டு முதன்முறையாக ஜனவரி 16 முதல் 18 வரை மூன்று நாள்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்துகிறது.
இதில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.