சென்னை: தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், வட மாநிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கேரளத்தில் பெய்யும் மழையால் எல்லையோர மாவட்டங்களான கோவை, நீலகிரியிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 6 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.