சென்னை: பிக் பாக்கெட் அடிப்பதுபோல அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பறிக்க நினைக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்பாராத வகையில் திடிரென அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆறிவித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்வை நடத்துவது சரியல்ல. அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தை நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம்.
பொதுக் குழு தீர்மானங்களுக்கு எதிரான மனு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது. மக்கள் மன்றத்திலே தோல்வியை சந்தித்தப் பிறகும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருந்துவதாக இல்லை என்று கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் கூறியதாவது, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை சட்ட தியாக எதிர்கொள்ளவிருக்கிறோம். பிக்பாக்கெட் அடிப்பது போல பொதுச் செயலாளர் பதவியை பறிக்க பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. உரிய விதிகளின்படி எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், அதிமுக தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கட்சியை நாங்கள் மீட்டெடுப்போம். ஒரு சர்வாதிகாரியைப் போல எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்றும் ஓபிஎஸ் கூறினார்.