
சென்னையில் நடிகர் சரத்பாபுவின் உடல் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட நடிகர் சரத்பாபு உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அவரின் உடலுக்கு இன்று காலைமுதல் நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்திக், பார்த்திபன் உள்பட பல்வேறு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, சென்னை கிண்டி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சரத்பாபுவின் உடல் பிற்பகல் 2.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு(71), சிகிச்சை பலனின்றி நேற்று(மே.22) காலமானார். இவர் தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல பாத்திரங்களை ஏற்று நடித்தவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், என பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதையும் படிக்க: நான் சிகரெட் பிடித்தால்.. சரத்பாபு பற்றி மனம் திறந்த ரஜினிகாந்த்
இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது திரைப்படத்தின் மூலம் தமிழில் சரத்பாபு அறிமுகமானார்.