அமைச்சர் உதயநிதி தலைமையில் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளதாக அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கலைஞர் அரங்கம் புதுப்பிக்கப்படுவதால் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஹோட்டலில் நடைபெற்றது. இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளுக்காக இந்தக் கூட்டத்தைத் தலைவர் ஸ்டாலின் கூட்டியிருந்தார். நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஆறுமாதங்களுக்கு முன்பே தி.மு.க. சார்பில் தொடங்கிவிட்டோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
தமிழ்நாடு முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு மண்டல வாரியாகப் பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஐந்து மண்டலங்களில் மிகப்பெரிய மாநாடுகளைப் போல இக்கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது 2007-ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் - நடைபெற்றது.
இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இது ஒருநாள் மாநாடாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞரணிச் செயலாளர் - உதயநிதி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நான் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன். இந்த மாநாடு தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.