தில்லியில் இருந்து வரும் செய்திகள் நம்பிக்கை தருவதாகவும் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணையலாம் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் பாஜக தலைமை சற்று அதிருப்தியில்தான் உள்ளது, ஆனால் இந்த கூட்டணியை விடமாட்டார்கள், கண்டிப்பாக முயற்சி எடுப்பார்கள்.
சற்று காத்திருந்தால் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் வரலாம், வராமலும் போகலாம்.
தில்லியில் இருந்து வரும் செய்திகள் நம்பிக்கை தருகின்றன. ஓரிரு நாளில் கூட்டணியில் நல்ல எதிர்பார்த்த முடிவுகள் வர வாய்ப்புள்ளன.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த பிறகுகூட கூட்டணி குறித்துப் பேசலாம்.
இதையும் படிக்க | இபிஎஸ்ஸுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு! பேசியது என்ன?
எங்களுடைய கட்சிக் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது, அதிமுகவின் கூட்டணியைப் பொருத்தே முடிவு. ஏனெனில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகித்தது. இப்போது தலைமை வகித்த கட்சியே இல்லாதபோது, யார் தலைமை என்ற கேள்வி எழுகிறது. நிலையற்ற தன்மை நிலவுகிறது. எனவே, நிலைமை சீரான பின்னர் முடிவு எடுக்கப்படும்.
அதிமுக- பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை. அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணியை ஏற்படுத்தவே நானும் முயற்சி எடுக்கிறேன்.
சாதி வாரி கணக்கெடுப்பை புதிய தமிழகம் ஆதரிக்கவில்லை, இது மக்களை பிளவுபடுத்தக்கூடிய நடைமுறை' என்று பேசினார்.
பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என்று அதிமுகவினர் திட்டவட்டமாக கூறி வரும் நிலையில் கிருஷ்ணசாமி இவ்வாறு கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.