விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சிக்கல்

நிதி வராததால், விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ விரிவாக்கத் திட்டம் கிடப்பில் போடப்படலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
கிளாம்பாக்கம்
கிளாம்பாக்கம்


சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கே மத்திய அரசிடமிருந்து நிதி வராததால், விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ விரிவாக்கத் திட்டம் கிடப்பில் போடப்படலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

தற்போதைக்கு இந்த திட்டம் கிடப்பில் போடப்படுவதாகவும் போதுமான நிதி கிடைத்ததும், எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மாநில அரசு நிதியுதவி அளித்து வருகிறது. எனவே, இப்போதைக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது கடினமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் மற்றும் விரிவாக்கத் திட்டம், சென்னையில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து சில ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இதற்கிடையே, 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டாம் கட்டப் பணிகளுக்கான கட்டமைப்புகள் ரூ.61,843 கோடிச் செலவில் மதிப்பிடப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில்தான் விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கப் பணி குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வறிக்கையை கடந்த ஆண்டே மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது.

விமான நிலையத்திலிருந்து 15.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திருவிக நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், உயிரியல் பூங்கா வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்துக்கு ரூ.4,080 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த ஆய்வறிக்கை தொடர்பாக மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதில்லாமல், ஏற்கனவே, மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கான அனுமதி மற்றும் நிதி குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகை மற்றும் மாநில அரசு அளித்த தொகையுடன் தற்போதைக்கு இரண்டாம் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, இந்த நேரத்தில், விமான நிலையம்-கிளம்பாக்கம் விரிவாக்கத் திட்டத்திற்கு நிதியளிப்பதில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு அனுமதி கிடைத்துவிட்டால், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கி, கட்டுமானப் பணிகளும் தொடங்கிவிடும். ஆனால், தற்போதைய நிலையில், இந்த திட்டம் முழுமையடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com