பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் வருமானவரித் துறை சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலிலையொட்டி, சென்னை வருமான வரித்துறை தலைமைய அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டறைக்கு வடசென்னை பகுதியில் பல்வேறு இடங்களில் தேர்தலை ஒட்டி பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்கயிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை ஓட்டேரி, ஏழு கிணறு உள்ளிட்ட ஐந்து இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் ஏழு கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கரா தெருவில் இன்துராம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வருமானவரித்துறையினரின் சோதனையில் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.