மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றது.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரும் ஏப். 19 ஆம் தேதி பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மக்களவைத் தோ்தலில் 8 ஆயிரத்து 231 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிகிறது.
வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.