மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் கடந்த 4 நாள்களாக சிறுத்தை நடமாடி வரும் பகுதியில் ஆடு ஒன்று காயங்களுடன் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவும் சித்தர்காடு பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆட்டுக் குட்டி ஒன்றை வேட்டையாடியள்ள சிறுத்தை தேடும் பணியில் 4 ஆவது நாளாக வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
மயிலாடுதுறையில் செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.
இதையடுத்து, வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினா் சிறுத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
செம்மங்குளம் பகுதியில் இருந்து இடம் பெயா்ந்த சிறுத்தை, ஆரோக்கியநாதபுரத்தில் கருவேலங்காடு அடா்ந்த பகுதியில் பதுங்கியது. திருச்சி மண்டல வனப் பாதுகாவலா் சதீஷ், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் மயிலாடுதுறையில் முகாமிட்டு சிறுத்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினா்.
மேலும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வந்த வன காவலா்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் சென்சாருடன் கூடிய 16 கேமராக்களை பொருத்தினா். மேலும் 3 கூண்டுகளில் இறைச்சியை வைத்து சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு வைத்தனா். எனினும், காலையில் பாா்த்தபோது கூண்டுகள் காலியாக இருந்தன. மேலும், கண்காணிப்புக் கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை.
இந்தநிலையில், சித்தா்காடு தண்டபாணி செட்டித்தெரு பகுதியில் காவிரிக்கரை அருகில் வெள்ளிக்கிழமை காலையில் ஆடு ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது.
நாகை மாவட்ட வனத்துறை அலுவலா் அபிஷேக் தோமா் தலைமையில் அங்கு வந்த மருத்துவக் குழுவினா் ஆட்டை உடற்கூறாய்வு செய்தனா்.
இந்தநிலையில், நாள்தோறும் இரவில் இடம் மாறிக்கொண்டிருக்கும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் தருமபுரியில் இருந்து தொ்மல் ட்ரோன் வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வனத்துறையினா் 10 குழுக்களாக பிரிந்து மயிலாடுதுறை நகரை ஒட்டிய பகுதிகளில் சிறுத்தையை தேடிவருகின்றனா்.
இந்த நிலையில், நாள்தோறும் இடம் மாறிக்கொண்டு இருக்கும் சிறுத்தை சித்தர்காடு பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் ஆட்டுக் குட்டி ஒன்றை வேட்டையாடி வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
வேட்டையாடப்பட்ட ஆட்டின் பாகங்களை வனத்துறையினர், காவல்துறையினர் நேரில் பார்வையிட்டனர்.
இதையடுத்து தொ்மல் ட்ரோன் அமைத்தும் கண்காணித்தும் அகப்படாமல் கடந்த நான்கு நாள்களாக மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை தேடும் பணியில் வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தொடா்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக தொ்மல் ட்ரோன் வைத்து சிறுத்தையை கண்காணித்தும் அகப்படாத சிறுத்தையை பிடிப்பதற்காக, அனுபவம் பெற்ற வனக்காவலா்கள் பொம்மன், காலன் இருவா் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறுத்தை விரைவில் பிடிபடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் உள்ளனா்.