பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்க முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வசதியாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப் வழங்கும் பணி தமிழகத்தில் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சில இடங்களில், வாக்காளர்களக்கு பூத் ஸ்லிப் வழங்கப்படவில்லை என்றும். சிலருக்கு பூத் ஸ்லிப் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சத்யபிரத சாகு, பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். பூத் ஸ்லிப் இல்லாதவர்களுக்கும் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.