தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை மாநகர சாலைகள் வெறிச்சோடின.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய பிரமுகர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகிறார்கள்.
இன்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் ஏராளமானோர் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடைமையை ஆற்றி வருகின்றனர்.
சொந்த ஊர்களில் வாக்களிப்பதற்காக, சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அனைவரும் வாக்களிக்க வசதியாக விடுமுறை விடப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
அதனால், முக்கிய கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால், முக்கிய கடை வீதிகள், பரபரப்பான முக்கிய சாலைகள் என அனைத்தும் மக்கள் நடமாட்டமோ, வாகன நெரிசலோ இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
காலை 9 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 15.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.