சென்னை: ஒட்டுமொத்தமாக வாக்குப் பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது என்று தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகின. இரவு 12 மணியளவில் இந்தத்தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தலில், ஊரகப் பகுதிகளிலுள்ள தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதத்துக்கும், நகரப் பகுதிகளிலுள்ள வாக்கு சதவீதத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. சென்னையில் உள்ள தொகுதிகள் வழக்கம் போல கடைசி இடத்தைப் பிடித்திருந்தன.
இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை, வாக்காளர் பட்டியலில் பெயர் இடமாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்யும் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் திரும்பத் திரும்ப சரிபார்க்க வேண்டும்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது. பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தமிழிழை குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பல்வேறு பிரச்னை மற்றும் சவால்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலை சுமூகமாக நடத்தியிருக்கிறது என்று பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.